பேருவலை பகுதியில் இரண்டு பாடசாலைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து நேற்று (05) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த மாணவர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம பாதாகொட வித்தியாலயத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ஏனைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தாக்குதலுடன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய வெளிநபர்களும் தொடர்புபட்டுள்ளமை இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவரின் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















