இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பொதுக்கூட்டம் இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற பின்னர் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் கருப்பு பட்டா அணிந்த சட்டத்தரணிகள், “சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுக”, “சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு வழங்குக” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும், அதனை பிரதிபலிக்கும் பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் சட்டத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
சட்டத்தரணிகள் தங்களது தொழில்பணிகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என கல்முனை கிளை தலைவி, சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர் இதன்போது வலியுறுத்தினார்.
“ஒரு சட்டத்தரணி மீது நடத்தப்படும் தாக்குதல், முழு நீதித்துறையின்மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் பொறுப்பாகும்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரிதமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்,” என அவர் இங்கு குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உறுப்பினர்களான சட்டத்தரணிகள், இன்று (பிப்ரவரி 16) நாடு முழுவதும் எந்தவொரு வழக்குகளுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் இருக்க தீர்மானித்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தீர்மானம் கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதுடன் சட்டத்துறையின் பாதுகாப்பும் சுயாதீனத்தன்மையும் குறித்து எழுந்துள்ள அச்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















