தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிகாட்டும் கொள்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒரு புரிதலை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், அது தொடர்பான ஒப்பந்தம் குறித்து இன்னும் பணிகள் செய்யப்பட வேண்டும் என்று ஜெனீவாவில் செவ்வாயன்று நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார்.
அதேநேரம், பொதுவான இலக்குகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சிக்கல்களை அடையாளம் காண்பதில் நல்ல முன்னேற்றத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன என்று ஓமானின் மத்தியஸ்தரான வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி கூறினார்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான ஈரானின் கொடிய ஒடுக்குமுறை தொடர்பாக அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள் மீண்டும் மீண்டும் எழுந்ததைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடந்தது.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நோக்கி நகர்ந்து வருவதாக சந்தேகிக்கின்றன.
எனினும், இதை தெஹ்ரான் எப்போதும் மறுத்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை சுவிஸ் நகரில் உள்ள ஓமன் தூதரின் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு முன் ஈரான், தனது அணுசக்தி திட்டம் மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து கவனம் செலுத்தும் என்று கூறியது.
ஈரானின் ஏவுகணை மேம்பாடு போன்ற பிற பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க விரும்புவதாக வொஷிங்டன் முன்னர் குறிப்பிட்டுள்ளது.
ஜெனீவாவில் எந்தெந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.















