மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் துண்டிப்பு மற்றும் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கும் வகையில், புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவற்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இடர் காரணமாகப் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களைப் பார்வையிடும் நோக்கில், ஆளுநர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று காலை நேரடி களப் பயணத்தை மேற்கொண்டனர்.
இதன்போது, பாண்டியன்குளம் – செல்வபுரம் பகுதியில் கடந்தகால எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகளால் கைவிடப்பட்டிருந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை ஆளுநர் நேரில் பார்வையிட்டதுடன், விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். ‘விவசாயிகள் ஆர்வமாக இருப்பின், இலங்கை மின்சார சபைக்கு மின்சாரத்தை விற்பனை செய்யாத வகையிலான சூரியக்கலத் திட்டத்தின் மூலம் இதனை மீள இயக்க முடியும். இது தொடர்பில் விவசாயிகளுடன் பேசி இறுதித் தீர்மானத்தை அறியப்படுத்துங்கள்’ என அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், வன்னிவிளாங்குளம் – பனங்காமம்பற்று வீதியில் மூன்று இடங்களில் பாலங்கள் இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் மாந்தை கிழக்கு பிரதேசம் முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் அபாயம் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்விடங்களை நேரில் பார்வையிட்ட ஆளுநர், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து இதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், புளியங்குளத்திலிருந்து குமரிக்குளம் செல்லும் வாய்க்காலில் செல்வபுரம் காட்டுக்கரை வீதியிலுள்ள பாலத்தை விரிவுபடுத்துவது குறித்தும், வெள்ள நீர் மேவிப் பாயும் இடங்களில் புதிய பாலம் அமைப்பது குறித்தும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு சாத்தியப்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் பணித்தார்.
தொடர்ந்து நட்டாங்கண்டல் பிரதேச மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஆகியவற்றைப் பார்வையிட்ட ஆளுநர், மருத்துவமனையின் விடுதிகளை உடனடியாகத் திருத்தியமைத்து, மக்கள் பாவனைக்கு மீளக் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார்.
பாண்டியன்குளத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட முன்னோடி வீட்டுத் திட்டத்தில், பல வீடுகள் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுவதையும் ஆளுநர் பார்வையிட்டார். இது தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதாக அவர் உறுதியளித்தார்.
இக்களப் பயணத்தை தொடர்ந்து மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் பொதுமக்களின் குறைகேள் சந்திப்பும் இடம்பெற்றது.
இக்களப் பயணத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சுகாதார மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்,பிரதேச செயலர், மாகாணத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் (நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, விவசாயம், சுகாதாரம்) வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

















