பிரித்தானிய அரச பரம்பரையில் இருந்து ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor) நீக்குவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு,எச்சரிக்கையுடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
எனினும் அவரை அரச பரம்பரையிலிருந்து நீக்கும் தொடர்பான எந்த தீர்மானமும், தற்போது நடைபெற்று வரும் பொலிஸ் விசாரணை முடிவடைந்த பின்னரே எடுக்கப்படும் என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே , ஆண்ட்ரூவை வாரிசு வரிசையிலிருந்து நீக்குவது ‘முற்றிலும் நாடாளுமன்றத்தின் விஷயம்’ எனவும் நாடாளுமன்றத்தின் விருப்பத்திற்கு எதிராக அரண்மனை எந்தவிதத்திலும் செயல்படாது எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
மன்னர் சார்ல்ஸ் மூன்றாமவரின் சகோதரரான ஆண்ட்ரூவை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இத்தகைய மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில், அது பிரித்தானியாவைத் தாண்டி காமன்வெல்த்தின் பிற நாடுகளுடனும் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டிய விடயம் என்பதுடன், 82 சதவீத பிரித்தானியர்கள் ஆண்ட்ரூவை வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதை ஆதரிக்கின்றனர். வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே அதற்கு எதிராக உள்ளனர்; மேலும் 12 சதவீதம் பேர் தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை எனவும் அறியமுடிகிறது
இந்த விவகாரம், பிரித்தானிய அரச குடும்பத்தின் எதிர்காலம் மற்றும் அதன் பொது நம்பகத்தன்மை குறித்து மீண்டும் ஒருமுறை பரவலான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் விசாரணையின் முடிவுகள் மற்றும் அரசாங்கத்தின் அடுத்த கட்ட முடிவுகள், இந்த விவகாரத்தின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


















