லண்டனில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பிற்காக 100 மேலதிக பொலிஸ் அதிகாரிகளை லண்டன் பெருநகர பொலிஸார் (Met Police) நியமித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தொடர்ச்சியாகத் தீவைப்புச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வார இறுதியில் மட்டும் இனவெறி மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஈரானியத் தூண்டுதலின் பேரில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க பிரித்தானிய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள மன்னரின் உரையில் (King’s Speech) இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 100 அதிகாரிகள், யூத மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
தொடர்ச்சியான தாக்குதல்களால் லண்டனில் வசிக்கும் யூத மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவே இந்த அதிரடிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













