மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக பொது மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கு அமைவாக அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதார துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி வைத்தியசாலை பகுதியை அண்டிய உணவகங்கள் இரண்டின் மீதும் மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதியில் இரு உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக உரிய சுகாதார நடைமுறையை பின்பற்றாமை,கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப் படாமை,அதிக அளவு இலையான்கள்,கையுறை பயன்படுத்தாமை,சுகாதாரமற்ற முறையில் உணவுகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளடங்களாக பல்வேறு குற்றங்களை அடிப்படையாக கொண்டு உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.














