வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இவர் இன்றையதினம் அதிகாலை 3.50 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளார்.சந்தேகநபர் கொண்டு வந்த மூன்று பயணப் பொதிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டனர்.
இதன்போது, அந்தப் பொதிகளுக்குள் மிகச்சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான ‘மென்செஸ்டர்’ ரக 40, 000 சிகரெட்டுகள் அடங்கிய 200 கார்ட்டூன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

















