சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை, அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரித்தானியாவில் வலுவடைந்துள்ளன.
அவரது 66-வது பிறந்தநாளன்று காவல்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கை, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக இருந்த காலத்தில், உணர்திறன் மிக்க இரகசியத் தகவல்களை எப்ஸ்டினுடன் ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் 11 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, வின்சர் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நான்காவது நாளாக இன்றும் காவல்துறையினர் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற தேசத்துரோக விசாரணை (Treason investigation) நடத்தப்பட வேண்டும் என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒருவேளை நாடாளுமன்றம் இதற்கான சட்டங்களைக் கொண்டுவந்தால், ஆண்ட்ரூவை வாரிசு வரிசையில் இருந்து நீக்குவதற்கு மன்னர் சார்லஸ் தடையாக இருக்க மாட்டார் என அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்” எனத் தெரிவித்துள்ள மன்னர் சார்லஸ், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
1936-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரித்தானிய அரச குடும்பம் சந்திக்கும் மிகப்பெரிய நெருக்கடியாக இது பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளிடமும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.














