திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வரவேற்புரை நிகழ்த்தினார்.
லைக்கோஸ் மற்றும் டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரதி அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
மீனவர்களுக்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான நிவாரணத் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
எதிர்கால சந்ததியினருக்காக கடல் வளத்தையும், நீரின் தரத்தையும் பாதுகாப்பதே அமைச்சின் முதன்மை நோக்கம் என வலியுறுத்தப்பட்டது.
கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் என். சிவலிங்கம், கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சின் செயலாளர், ஏ. எல். எம். அஸ்மி, மாவட்ட மேலதிக செயலாளர் எஸ். சுதாகரன், நாரா (NARA) நிறுவனத்தின் விஞ்ஞானி பிரதீப் குமார, இலங்கை துறைமுக மீனவ கூட்டுத்தாபனத் தலைவர் B. A. P. கபில பமுனு ஆராச்சி, தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனச் செயலாளர் L. G. அஜந்த குமார, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன், திருகோணமலை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.













