வருகிற கோடைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்குத் தேவையான இடவசதி அரசாங்கத்திடம் போதுமான அளவு இருப்பதாக கனடா திறைசேரி சபையின் தலைவர் ஷஃப்கத் அலி (Shafqat Ali) தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “நிச்சயமாக எங்களிடம் போதிய இடவசதி இருக்கும் என நான் நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமைச்சரின் இந்த அறிக்கை கடந்த வாரம் அதே துறையினால் வெளியிடப்பட்ட தகவலுக்கு மாறாக அமைந்துள்ளது.
கடந்த வாரம் ‘ரேடியோ-கனடா’வுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜூலை 6 முதல் நடைமுறைக்கு வரும் 4 நாள் வேலைத் திட்டத்திற்கு சில இடங்களில் போதிய இருக்கை வசதிகள் (Workstations) இல்லாமல் போகலாம் எனத் திறைசேரி சபை தெரிவித்திருந்தது.
இந்த முரண்பாடு குறித்துக் கேட்கப்பட்டபோது, இடவசதி இல்லாத பட்சத்தில் யாரையும் வலுக்கட்டாயமாக அலுவலகத்திற்குள் திணிக்கப் போவதில்லை என்றும், பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் துறையுடன் இணைந்து இடவசதிகளைக் கண்டறியப் போவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
2024 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, வரும் ஜூலை மாதம் முதல் நான்கு நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் தொலைதூரப் பணியில் (Remote Work) இருந்த ஊழியர்களை முழுமையாக அலுவலகத்திற்குத் திருப்பும் அரசாங்கத்தின் இந்த முயற்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.















