மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை 5.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த 18 விமானங்களும், புறப்படவிருந்த 25 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேற்று (28) மத்திய கிழக்கு இடங்களுக்குப் புறப்பட்ட ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியாவால் இயக்கப்படும் இரண்டு விமானங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பின.
மத்திய கிழக்கில் இறுதி இலக்குகளை வைத்திருக்கும் பயணிகள் அல்லது அந்தப் பகுதி வழியாக பயணிப்பவர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அவர்கள் தங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பார்த்து, அண்மைய விமானத் தகவல்களுக்கு விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.airport.lk ஐப் பார்வையிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிகமாக, நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேற முடியாத வெளிநாட்டு பயணிகளுக்கு ஏழு நாள் விசா நீட்டிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியா, சீனா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என்று விமான நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார்.












