அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மிகவும் எச்சரிக்கையான ஒரு இராஜதந்திரப் பாதையைப் பின்பற்றி வருகிறார்.
ஈராக் போர் நினைவுகளால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத தொழிற்கட்சிக்குள் , மத்திய கிழக்கு இராணுவத் தலையீடுகள் என்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது.
இதனால் ஸ்டார்மர் தற்போது இருமுனை அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்:
அதாவது அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை “சட்டவிரோதமானது” என ஸ்டார்மர் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என தொழிற்கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை, அமெரிக்காவிற்குத் தனது முழுமையான ஆதரவை ஸ்டார்மர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவர் மதில் மேல் பூனையாகச் செயல்படுவதாகவும் கன்செர்வேட்டிவ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானிய போர் விமானங்கள் தற்போது அப்பகுதியில் தனது நாட்டின் நலன்களைப் பாதுகாக்க வான்பரப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதலில் பிரித்தானியா ஈடுபடவில்லை என்பதை ஸ்டார்மர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாகக் கருதி, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஸ்டார்மர் ஏற்கனவே நிராகரித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தொலைக்காட்சி உரையில் பேசிய ஸ்டார்மர், ஈரானிய அரசாங்கத்தை “வெறுக்கத்தக்கது” என வன்மையாகக் கண்டித்த நிலையில் ட்ரம்ப்பின் தாக்குதலுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காத போதிலும், தாக்குதலுக்கான காரணங்களுடன் தான் உடன்படுவதாக அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டிய அதேவேளை, உள்நாட்டு அரசியலையும் சர்வதேச சட்டங்களையும் மதிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் உள்ளார்.
இதேவேளை, தாக்குதலுக்குப் பின்னர் ட்ரம்ப் மற்றும் ஸ்டார்மர் இடையே ஒரு தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.














