அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொ*ல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்காக வரிசையாகத் தோண்டப்பட்டுள்ள கல்லறைகளின் புகைப்படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் திகதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் மக்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், திறந்தவெளி மைதானம் ஒன்றில் வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான கல்லறைகள் தோண்டப்பட்டு, சுண்ணாம்புப் பொடியால் அடையாளமிடப்பட்டுள்ளன
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அமெரிக்க – இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோருக்காக இந்தக் கல்லறைகள் தோண்டப்படுகின்றன.
அவர்களின் உடல்கள் சிதறிப் போயுள்ளன. காசா முதல் மினாப் வரை அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி படுகொ*லை செய்யப்படுகின்றனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளான பள்ளியில் மீட்புப் பணியாளர்கள் சிதைந்த கான்கிரீட் இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் நடத்துவதும், அங்கிருந்து பள்ளிப் பைகள் மீட்கப்படுவதும் வீடியோக்களில் பதிவாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் இதுகுறித்து முறையிட்டுள்ள ஈரான், பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் இது என்றும், இதனை ‘போர்க்குற்றம்’ மற்றும் ‘மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்’ என்றும் சாடியுள்ளது.















