நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளித்துள்ளது.
அதன்படி, சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பான பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் பணிப்புரைக்கமைய, தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யாத நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால், பொதுமக்களுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, தரமற்ற நிலக்கரியானது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமன்றி, மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டுத் திறன் குறித்தும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.













