நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் கீழவையில் 182 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் 2 இடங்களே குறைவாக உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களில் நேபாளத்தில் ஒரு தனி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
தேர்தலின் முக்கிய முடிவுகள்
ராஷ்டிரிய சுதந்திர கட்சி : 182 இடங்கள்
நேபாளி காங்கிரஸ்: 38 இடங்கள்
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : 25 இடங்கள்
இதேவேளை, 1 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக ரெப் பாடகரும் காத்மண்டு மாநகர மேயருமான பாலேந்திர ஷா பதவியேற்கவுள்ளார்.2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இளம் கட்சி, நேபாளத்தின் அரசியலமைப்பு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ‘விகிதாசார பிரதிநிதித்துவ’ முறையையும் மீறி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது உலக அரசியலையே வியக்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி , தனது சொந்தக் கோட்டையான ஜாப்பா 5 தொகுதியில் பாலேந்திர ஷாவினால் படுதோல்வியைச் சந்தித்தார். அதேபோல், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாப்பாவும் தனது ஆசனத்தை வேட்பாளரிடம் இழந்துள்ளார்.
வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வாரிசுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் போராட்டமே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 77 பேரின் உயிர்த்தியாகத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, நேபாளத்தின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாலேந்திர ஷா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














