இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் மீண்டும் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்துள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து குறித்த வாகனம் 24 மாடுகளுடன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு கொண்டு செல்லும் போது வீதிக்கடைமையில் நின்ற போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி குழுவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதன் போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் உரிய வழிதடை அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும் வாகனத்தில் காணப்பட்ட மாடுகள் நெருக்கி அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இடவசதிக்கு புறம்பாக அதிகளவான மாடுகள் ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் மிருகவதை சட்டத்தின் கீழ் கல்முனை தலைமையக பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்ற நீதிவான் 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆந் திகதி மறு தவணைக்காக ஒத்தி வைத்தார்.
மேலும் மீட்கப்பட்ட மாடுகள் அடங்கிய வாகனம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைககப்பட்ட நிலையில் இரு மாடுகள் அவ்விடத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்த இரு மாடுகளும் கல்முனை மாநகர சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அருகில் புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.













