இந்தியாவுக்காக வரவிருந்த எட்டு எரிவாயு டேங்கர் கப்பல்கள் (Tanker ships) மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக Hormuz பகுதியில் காத்திருக்கின்றன. இந்த கப்பல்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாக இந்தியா மற்றும் ஈரான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்( S. Jaishankar) ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி (Seyed Abbas Araghchi )உடன் தொலைபேசி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார். இரு அமைச்சர்களும் இந்த விவகாரம் குறித்து நான்காவது முறையாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்தியாவுக்கு வர வேண்டிய சமையல் எரிவாயு டேங்கர் கப்பல்களை அனுமதிக்க இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகளவில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாகும். உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் இந்த வழியாகவே கடத்தப்படுகிறது. தற்போது இந்த கடல் பாதையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல கப்பல்கள் பயணம் செய்ய முடியாமல் காத்திருக்கின்றன.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவில் சுமார் 60 முதல் 67 சதவீதம் வரை இறக்குமதியை நம்பியுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து எரிவாயு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறுகையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் குற்றங்களில் ஈடுபடுகின்றன என்றும், அதற்கு எதிராக சட்டபூர்வமான முறையில் ஈரான் தன்னை பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் BRICS நாடுகள் உலக அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்காக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.














