அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலரீலங்கா” தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பௌதீக சூழல் மற்றும் சுற்று சூழல் நிலைத்தன்மையை அபிவிருத்தி செய்வதற்கான நாடுதழுவிய அர்ப்பணிப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம், தேசிய ரீதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு இணையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு கிராமம் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமமமாக அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத்திட்டம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தினூடாக கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் உடல்நலம், வீட்டு முகாமை மற்றும் சமூக நல்வாழ்வு, கலாசார மற்றும் ஆன்மீக அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக அக்கிராமத்தை உற்பத்தித் திறனில் அபிவிருத்தி செய்வதே இதன் நோக்கமாகும்.
இதன்போது பிரதேச செயலாளரினால் சமூக உற்பத்தித்திறன் திட்டம் மற்றும் அதன் நோக்கங்களை பற்றிய தெளிவூட்டல் இடம்பெற்றது.
கிளீன் ஸ்ரீலங்கா தொடர்பான காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டதுடன், உற்பத்திதிறன் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள் இதன்போது பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் . சத்யகௌரி தரணிதரன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் கிளீன் ஸ்ரீலங்கா பிரதேச ஒருங்கிணைப்பாளர் எம். சனுஜன், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாங்காடு கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், மாங்காடு கிராம ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















