இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 37 கோடியே எழுபது இலட்சம் ரூபா சந்தை மதிப்புடைய ‘ஹசீஸ்’ போதைப்பொருள் தொகையுடன், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துச் சுங்க அதிகாரிகளினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சொகுசு வசதிகளைப் பெறுவதற்காக விசேட பயணிகள் பணம் செலுத்திப் பயன்படுத்தும் ‘கோல்ட் ரூட்’ முனையத்தினூடாக, இந்த வெளிநாட்டவர் நேற்று (19) நள்ளிரவு நாட்டிற்குள் நுழைய முயன்ற போதே சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளார்.
23 வயதுடைய இம்மாணவர், கனடாவிலிருந்து புறப்பட்டு டுபாய் ஊடாக எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 11.15 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த 02 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவற்றுள் 146 பாக்கெட்டுகளில் மிக சூட்சுமமாக அடைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 37 கிலோகிராம் 639 கிராம் எடையுடைய “ஹசீஸ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் முறியடிப்பு குறித்துப் பேசிய விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது இலங்கையின் வான்வழிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டனர்.
இவ்வளவு பெரிய பெறுமதியும் எடையும் கொண்ட “ஹசீஸ்” போதைப்பொருள் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சாதாரண சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக, சுமார் 206 அமெரிக்க டொலர் போன்ற பெருந்தொகைப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்தி, ‘கோல்ட் ரூட்’ விசேட பயணிகள் முனையத்தைப் பயன்படுத்தி இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற முதல் சந்தர்ப்பமும் இதுவேயாகும்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் இம்மாணவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் இந்த போதைப்பொருள் இலங்கையில் யாருக்காகக் கொண்டுவரப்பட்டது என்பது போன்ற விபரங்களை வெளிக்கொண்டுவருவதற்காக, சந்தேகநபரான வெளிநாட்டு மாணவன் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஹசீஸ்’ போதைப்பொருள் தொகை என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.














