பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வேல்ஸ் மக்களை “அந்நிய மொழி பேசுபவர்கள்” என்று குறிப்பிட்டது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு வாழ்த்துச் செய்திகளைப் பதிவு செய்யும் ‘காமியோ’ (Cameo) தளம் வழியாக, நைஜல் ஃபாரேஜ் வெளியிட்ட காணொளி ஒன்றே இந்தச் சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது குறித்துப் பேசிய அவர், “அந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களில் பாதிப் பேர் வேல்ஸ் (Welsh) மக்கள், அத்தனை அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஃபாரேஜின் இந்த கருத்தை வேல்ஸின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
“இது வேல்ஸ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் எனவும் ரிஃபார்ம் கட்சிக்கு வேல்ஸ் கலாச்சாரம் மற்றும் மொழி மீது மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது எனவும் வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேரன் மில்லர் (Darren Millar) சாடியுள்ளார்.
இதேபோல் தொழிற்கட்சியும் இது “வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, “காமியோ தளத்தில் பதிவிடப்படும் குறுஞ்செய்திகள் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பட்ட முறையில் பகிரப்படுபவை, அவற்றை அரசியல் அறிக்கைகளாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரமாகவோ கருதக்கூடாது” என நைஜல் ஃபாரேஜின் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் (Senedd Election), ஆளும் தொழிற் கட்சிக்கும் ரிஃபார்ம் மற்றும் பிளாய்ட் சிம்ரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், ஃபாரேஜின் இந்த கருத்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












