வேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 மே மாதம், வடக்கு வேல்ஸில் உள்ள பாண்டி (Pandy) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதான ஸ்டெஃபி டேவிஸ் (Steffie Davies) என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் மீட்கப்பட்ட போது, 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட அவரது உடல் வெறும் 36 கிலோ எடையுடன், “எலும்புக்கூடு” போன்ற நிலையில் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவரது படுக்கை முற்றிலும் அழுக்கடைந்த நிலையில் இருந்ததோடு, அவரது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் (Pressure sores) இருந்ததும் கண்டறியப்பட்டது.
ஸ்டெஃபியின் பெற்றோர்களான ஆலன் (60) மற்றும் பெர்னிடா டேவிஸ் (60) ஆகிய இருவரும், தங்கள் மகளின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
ஸ்டெஃபிக்கு கடுமையான சமூகப் பதற்றம் (Anxiety) இருந்ததால், அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார்.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பெற்றோர், அவருக்கு முறையான உணவோ அல்லது மருத்துவ உதவியோ வழங்காமல் அவரைப் புறக்கணித்துள்ளனர்.
ஸ்டெஃபி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பே படுக்கையை விட்டு எழ முடியாத நிலையில் இருந்தும், அவர்கள் எந்த உதவியும் கோரவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டேசி (Mrs Justice Stacey), பெற்றோரின் இந்த கவனயீனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
பெற்றோர் இருவரும் தங்களது உடல்நலக் குறைபாடுகளுக்காக மருத்துவரை அணுகத் தெரிந்திருந்தும், மகளுக்காக எவ்வித உதவியும் பெறவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் தங்களது மகளைக் கொடுமைப்படுத்தி மரணத்திற்குக் காரணமான குற்றத்திற்காக ஆலன் மற்றும் பெர்னிடா ஆகிய இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது தண்டனை காலத்தில் நான்கில் மூன்று பகுதியைச் சிறையில் கழித்த பின்னரே பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.












