வேல்ஸில் நாய் பந்தயத்திற்கு (Greyhound Racing) தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
வேல்ஸ் நாடாளுமன்றத்தில் (Senedd) நிறைவேற்றப்பட்ட நாய் பந்தயத் தடைச் சட்டத்திற்கு எதிராக, பிரித்தானிய கிரேஹவுண்ட் சபை (GBGB) லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆலோசனைகள் முறையற்றவை என அந்தச் சபை வாதிட்டது.
எனினும், ஜனநாயக ரீதியாக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுவது முறையற்றது எனக் கூறி, இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்த வார தொடக்கத்தில் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் 39-க்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது அரச அங்கீகாரத்திற்காக (Royal Assent) காத்திருக்கும் இச்சட்டம், 2027 ஏப்ரல் முதல் 2030 ஏப்ரலுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீர்ப்பை விலங்கு நல அமைப்புகள் வரவேற்றுள்ளன.
நாய் பந்தயங்களின் போது ஆயிரக்கணக்கான நாய்கள் உயிரிழப்பதையும் காயமடைவதையும் சுட்டிக்காட்டிய அவர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களின் கையெழுத்து வேட்டைக்குப் பின்னரே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள கிரேஹவுண்ட் சபை (GBGB), இச்சட்டம் குடும்பத் தொழில்களையும் வேலைவாய்ப்புகளையும் அழிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
மே மாதம் நடைபெறவுள்ள வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கம் இந்தத் தடையை நீக்கும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது வேல்ஸின் கெர்பிலி (Caerphilly) பகுதியில் ஒரேயொரு நாய் பந்தயத் திடல் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













