இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் எட்டு கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகம் ஆகியன அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் வெற்றிகொண்டதுஆரம்பம் முதல் கடைசிவரை இரண்டு அணியினரும் மிகத் திறமையாக விளையாடி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தினர்.
போட்டியின் 4ஆவது நிமிடத்தில் ஜொன் லவானி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் அணியை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து நியூ ஸ்டார் கழகம் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது.
நியூ ஸ்டார் கழக வீரர்கள் இருவர் கோல் போட எடுத்த முயற்சிகள் கோல்காப்பின் குறுக்குக் கம்பத்தில் பட்டு திசை திரும்பின.
இடைவேளையின்போது சென். மேரிஸ் கழகம் 1 – 0 என முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் நியூ ஸ்டார் வீரர் மொஹமத் தில்ஹாம் 49ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தினார்.இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.
56ஆவது நிமிடத்தில் ஜே. ஜெரின்சன் தலையால் முட்டி அருமையான கோல் ஒன்றைப் போட்டு சென். மேரிஸ் கழகத்தை முன்னிலையில் இட்டார்.அதன் பின்னர் இரண்டு அணியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆனால், இறுதியில் சென். மேரிஸ் கழகம் 2 – 1 என வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஜாவா லேன் கழகத்துக்கும் தர்காநகர் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் ஜாவா லேன் கழகம் 16 – 15 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் சம அளவில் மோதிக்கப்பட்ட இந்தப் போட்டி 2 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.இப் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இஸ்மய்லா அபுமியர் கோல் போட்டு சுப்பர் சன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
போட்டியின் 77ஆவது நிமிடம்வரை சுப்பர் சன் முன்னிலையில் இருந்தது.ஜாவா லேன் சார்பாக 78ஆவது நிமிடத்தில் கோல் நிலையை என்வாபிசி பேர்னார்ட சமப்படுத்தினார்.
ஆனால், அடுத்த நிமிடமே அபுமியர் தனது இரண்டாவது கோலைப் போட்டு சுப்பர் சன்னை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
எனினும் போட்டியில் 90ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்துக்கு கிடைக்கப்பெற்ற பெனல்டியை ஒலுவாசேயுன் ஒலாவாலே கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.மத்தயஸ்தரினால் வழங்கப்பட்ட பெனல்டியை சுப்பர் சன் கழக வீரர்கள் கேள்விக்குட்படுத்தியதுடன் அதிகாரிகளும் அது தவறான தீர்ப்பு என வாதிட்டனர். ஆனால், மத்தியஸ்தர் எடுத்த தீர்ப்பு சரியானது என்பது சலன அசைவுகளின் மூலம் தெளிவாக அறியக்கூடியதாக இருந்தது.
போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அறிமுகப்படுத்தினார்.19 பெனல்டிகள் வரை நீடித்த இந்த பெனல்டி முறையில் 16 – 15 என ஜாவா லேன் வெற்றிபெற்றது.
















