அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தவிர இந்தக் காலக்கட்டத்தில் 177 மாணவர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் காயமடைந்ததாகவும் ஈரானின் கல்வி அமைச்சு கூறியதாக தெஹ்ரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், போர் தொடங்கியதிலிருந்து 600-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இதில், அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட இதுவரை 1,340க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள ஜோர்தான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













