தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்று கலந்துரையாடலில்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தத் திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து விவாதிப்பதற்காக, இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
IMF திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மறுஆய்வுகளின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தூதுக்குழுவினர் ஜனாதிபதியுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டினர்.
குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், வருவாய்களை முறையாக நிர்வகித்தல் மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதன் முந்தைய நிலையை விட அதிக மீள்திறன் கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெளிப்புறச் சவாலை எதிர்கொண்டு, எரிபொருள் விலைகள் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் தாக்கத்தை நிர்வகிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இவ்வாறான வெளிப்புறச் சவால்கள் இருந்தபோதிலும், அடையப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டே, நாட்டின் மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் முறையாக நிர்வகிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளால் பாராட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் – சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோருடனும் சந்திப்பு
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சித் தலைவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி பிரிவுத் தலைவர் இவான் பாபர்ஜயோஜியோ மற்றும் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொருளியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுடன் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை சபாநாயகர் பாராட்டியிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்திற்கு இலங்கை முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை, மீள் உறுதிப்படுத்திய சபாநாயகர், வலுவான நிதியியல் மற்றும் பணக் கொள்கையைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் -தலைவர்களுடான சந்திப்பிலும் ஈடுபட்டனர்
இதேவேளை நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடான சந்திப்பிலும் சர்வதேச நாணய ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலித் ஜயவீர, எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
டித்வா புயல் தாக்கத்திலிருந்தான மீட்சியில் காணப்படும் சவால்கள் மற்றும் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து கட்சித் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வரிகளை சீர்செய்தல், பணவீக்க முகாமைத்துவம், வெளிவாரியான அழுத்தங்கள் மற்றும் பேரண்டப் பொருளாதாரத்தின் நிலைப்புத் தன்மையை உறுதி செய்வதற்கான நீடித்த கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தேவை போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.














