தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, இன்றுவரை அவரது உடல் எங்கே இருக்கிறது என்ற உண்மையை மறைத்து வரும் கைதி ஒருவரை விடுவிக்க பிரித்தானிய பிணைச் சபை (Parole Board) தீர்மானித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிளின் ராசல் (Glyn Razzell) என்பவர், 2002 ஆம் ஆண்டு சுவிண்டன் (Swindon) பகுதியில் தனது மனைவியான லிண்டாவை (Linda) கொலை செய்த குற்றத்திற்காக 2003 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
விவாகரத்து நடைமுறைகளின் போது ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணமாக அமைந்தது.
லிண்டாவின் உடல் இன்றுவரை கண்டெடுக்கப்படவில்லை என்றாலும், ராசல் பயன்படுத்திய காரில் இருந்த இரத்தக் கறைகளை ஆதாரமாகக் கொண்டு அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 16 ஆண்டுகள் குறைந்தபட்சத் தண்டனையை அனுபவித்து முடித்த ராசல், ஏற்கனவே மூன்று முறை பிணை கோரி விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு, ‘ஹெலன்ஸ் சட்டத்தின்’ (Helen’s Law) கீழ் பிணை மறுக்கப்பட்ட முதல் கைதியாக இவர் பதிவானார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், ராசல் இனி பொதுமக்களுக்கு ஆபத்தானவர் அல்ல என்று பிணைச் சபை தீர்மானித்துள்ளது.
அவர் கொலை செய்த “உடல் எங்கே இருக்கிறது என்று கூற மறுத்து வந்தாலும் அதற்காக அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது” எனச் சபை தனது முடிவில் தெரிவித்து அவரை பிணையில் விடுவிக்க பரிந்துரைத்துள்ளது.
பிணைச் சபையின் இந்த முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்து பிரித்தானிய நீதியமைச்சின் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் இந்த தீர்மானம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


















