வேல்ஸ் (Wales) மாநிலத்திற்கு வெளியே சென்று கல்வி கற்கும் மாணவர்களுக்கான 1,000 பவுண்ட் கல்வி உதவித்தொகையைத் தனது கட்சி ரத்து செய்யாது என பிளாய்ட் சிம்ரு (Plaid Cymru) கட்சியின் தலைவர் ரன் அப் ஐயோர்வெர்த் (Rhun ap Iorwerth) உறுதியளித்துள்ளார்.
வேல்ஸ் மாநில பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் சூழலில், மாநிலத்திற்கு வெளியே படிக்கும் மாணவர்களுக்கு 1,000 பவுண்ட் மானியம் வழங்குவது, மறைமுகமாக இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குவது போன்றது என பிளாய்ட் சிம்ரு கட்சியின் பொருளாதாரப் பேச்சாளர் லூக் பிளெட்சர் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
இது மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
எதிர்வரும் மே மாத செனட் (Senedd) தேர்தலை முன்னிட்டு கார்டிஃப் நகரில் நடைபெற்ற ஊடக நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிளாய்ட் சிம்ரு தலைவர் இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், மாநிலத்திற்கு வெளியே படிக்கும் மாணவர்களுக்கான மானியத்தை ரத்து செய்யும் திட்டம் ஏதும் தற்போது இல்லை (“No, there is no plan”) எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகங்கள் தற்போது 100 மில்லியன் பவுண்ட் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்த ஐயோர்வெர்த், இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய ‘நிதித் திட்ட மாதிரியை’ (Funding Model) உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கொள்கையிலிருந்து கட்சி இப்போது பின்வாங்கியிருப்பது, தேர்தல் காலத்தில் மாணவர்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.













