வடமேற்கு ஒன்ராறியோவிலிருந்து பரவிய காட்டுத்தீயின் புகை பகல் நேர வானத்தை இருளாக்கியதோடு, வடகிழக்கு அமெரிக்காவிலும் பரவியதால், சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன.
இதன் விளைவாக, புதன்கிழமை (15) அன்று உலகளாவிய முக்கிய நகரங்களிலேயே டொராண்டோவின் காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மதிப்பிடப்பட்டது.
டொரண்டோவிலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவில், மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் காட்டுத்தீ கடுமையாகப் பரவி, பரந்த நிலப்பரப்பில் புகையை உண்டாக்கி வருகிறது.
இருப்பினும் அவை நகரங்களுக்கு நேரடியாக அச்சுறுத்தலாக மாறவில்லை.
எனினும், கனடாவின் சுற்றுச்சூழல் துறை, டொராண்டோவிற்கான காற்றின் தர சுகாதாரக் குறியீட்டு அளவு 10-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இது “மிகவும் அதிக அபாயம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.
அதேவேளையில், அபாயகரமான இந்தச் சூழல் வியாழக்கிழமை (16) இரவு வரை நீடிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்தன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அண்டை மாநிலமான நியூ ஜெர்சியில் கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்குச் சில நாட்களுக்கு முன்பே நியூயோர்க் நகரம் அதன் தாக்கத்தை உணரத் தொடங்கியது.
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதையடுத்து உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்;
மேலும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வெளியே இருப்பவர்கள் கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலை வார இறுதி வரை புகை நீடிக்கக்கூடும் என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.











