இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதைத் தொடர்ந்து, நடப்புச் சாம்பியனான ஆர்ஜென்டினா, ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெய்னுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதிசெய்தது.
இந்தப் போட்டியின் முடிவு லியோனல் மெஸ்ஸிக்கும் லமின் யமாலுக்கும் இடையிலான ஒரு தலைமுறை மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
நியூ ஜெர்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டி, ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த 39 வயதுடைய மூத்த வீரரும் ஸ்பெய்னைச் சேர்ந்த 19 வயதுடைய விங்கர் (winger) ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் முதல் போட்டியாக அமைந்தாலும், அவர்கள் நேரில் சந்தித்துக்கொள்வது இது முதல் முறையல்ல.
இவ்விருவருக்கும் இடையிலான தொடர்பு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முந்தையது; பார்சிலோனாவில் நடைபெற்ற ஒரு விளம்பர மற்றும் தொண்டு சார்ந்த புகைப்படப் படப்பிடிப்பின்போது, 20 வயதான மெஸ்ஸிக்கும் அப்போது கைக்குழந்தையாக இருந்த யமாலுக்கும் இடையிலான சந்திப்பு முதன்முதலில் நிகழ்ந்தது.
2007-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஸ்பானிய விளையாட்டு நாளிதழான ‘டயாரியோ ஸ்போர்ட்’ (Diario Sport) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் (UNICEF) ஆகியவை இணைந்து நடத்திய ஒரு தொண்டு சார்ந்த ஓர் குலுக்கல் நிகழ்வின் மூலம், பார்சிலோனாவின் இளம் வீரர் லியோனல் மெஸ்ஸியுடன் ஒரு விளம்பரப் புகைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்கும் வாய்ப்பை யமலின் குடும்பத்தினர் பெற்றனர்.
ஸ்பெய்னின் கட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் குடும்பங்களுக்கு, பார்சிலோனா கால்பந்து கழகத்தைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரர்களுடன் இணைந்து விளம்பரக் காலண்டருக்கான புகைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்கும் வாய்ப்பை இந்த குலுக்கல் நிகழ்வு வழங்கியது.
அக்காலத்தில் வெறும் ஆறு மாதக் குழந்தையாக இருந்த லாமின் யமலின் குடும்பம், அக்குலுக்கலில் வெற்றி பெற்றவர்களில் ஒருவராகத் தேர்வானது.
திட்டமிடப்பட்ட நிகழ்வுகான புகைப்படப் படப்பிடிப்பு பார்சிலோனாவின் காம்ப் நௌ (Camp Nou) மைதானத்தின் உடை மாற்றும் அறையில் நடைபெற்றது.
அப்போது பார்சிலோனா அணியின் முக்கிய வீரராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்த இருபது வயதான லியோனல் மெஸ்ஸி, கைக்குழந்தையான லாம்ன் யமலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மெஸ்ஸி மற்றும் யமால் ஆகியோரின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் ஆவார்.
நீல நிற பிளாஸ்டிக் குழந்தைக் குளியல் தொட்டியில் மெஸ்ஸி, யமாலை ஏந்தியவாறு அந்தப் புகைப்படப் படப்பிடிப்பு நடைபெற்றது.
படப்பிடிப்பின் போது, அந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்வைத் தவிர அவர்களுக்குள் வேறு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.



2008-ஆம் ஆண்டுக்கான தொண்டு நிறுவன நாட்காட்டியில் வெளியான பிறகு, அந்தப் புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.
2024 யூரோ போட்டித் தொடருக்குப் பிறகு, யமலின் தந்தை மௌனிர் நஸ்ராவ்வி இன்ஸ்டாகிராமில் “இரு ஜாம்பவான்களின் தொடக்கம்” என்ற தலைப்புடன் அந்தப் படப்பிடிப்பின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து, அது இணையத்தில் வைரலானது.
அந்தப் புகைப்படப் படப்பிடிப்பு நடந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்புகைப்படத்தில் இடம்பெற்ற குழந்தையும் அந்த ஜாம்பவான் வீரரும் சர்வதேச அரங்கில் நேருக்கு நேர் மோதவிருக்கிறார்கள்.
அப்போது பார்சிலோனாவின் நம்பிக்கைக்குரிய இளம் வீரராக இருந்தவர், இப்போது கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரானார்.
அதே சமயம், குளியல் தொட்டியில் இருந்த அந்தக் குழந்தை, தற்போது நடப்பு கால்பந்தாட்ட தலைமுறையின் மிகப்பெரிய வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இந்த இரு விளையாட்டு வீரர்களுக்கும் இடையிலான பிணைப்பு, விதியின் விளையாட்டாக பார்சிலோனாவில் அவர்கள் பகிர்ந்துகொண்ட வரலாற்றையும் தாண்டி, இப்போது விளையாட்டின் மிகப்பெரிய மேடையான உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை நீள்கிறது.
















