இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கிய காலம் முதல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் நாள் வரையிலான காலகட்டத்தில், இலங்கைக்குள் நிலக்கரி இறக்குமதி செய்வதிலும், அரசிற்குச் சொந்தமான நிலக்கரி தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அல்லது அதன் வாரிசு நிறுவனங்களால் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளமையானது அரசியல்வாதிகள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
அண்மைக்காலமாக நிலக்கரி இறக்குமதி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பல்வேறு விவாதங்களும் இடம்பெற்றன.
இதன் பின்னணியிலேயே நிலக்கரி இறக்குமதி தொடர்பான கொள்முதல் செயல்முறையில் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளனவா என்பதை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி தொடர்பான கொள்முதல் காலகட்டத்தில் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதா இல்லையா என்பது குறித்தும், கொள்முதல் செயல்முறை, வழங்கல் செயல்முறை, தர ஆய்வு செயல்முறை, செயல்பாட்டு செயல்முறை மற்றும் பயன்பாட்டு செயல்முறை உள்ளிட்ட அது தொடர்பான அனைத்து செயல்முறைகளையும் விசாரித்தல் என்பன இந்த ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.
இந்த பின்னணியிலேயே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார்.
2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவும், 2009 முதல் இறக்குமதிகளை ஆய்வு செய்வதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஈடுபடுத்தவும் எடுக்கப்பட்ட அண்மைய நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
அரசின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும், வெளிப்படையான ஆட்சிமுறைக்கான முன்னெடுப்பையும் ஆதரிப்பதாகக் கூறிய அவர், நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.















