லண்டன் நிலத்தடி ரயில் (Tube) ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணிமுதல் முதல் ஆரம்பமாகவுள்ளதால் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் நிலத்தடி ரயில் வலையமைப்பின் ஓட்டுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் RMT (Rail, Maritime and Transport) தொழிற்சங்கத்தினர், இன்று நண்பகல் 12:00 மணி முதல் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, லண்டன் போக்குவரத்துச் சபை (TfL), ஓட்டுநர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை (Compressed four-day week) என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வேலை நேரம் அதிகமாக இருக்கும் என்றும், இது ஓட்டுநர்களுக்கு அதிக சோர்வை (Fatigue) உண்டாக்கி பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் என்றும் குறித்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை, , ஓட்டுநர்களின் வாராந்திர வேலை நேரத்தை 36-லிருந்து 35 மணிநேரமாகக் குறைக்க சபை முன்வந்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக லண்டனின் முக்கிய ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய போராட்டத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மீண்டும் ஒரு 24 மணிநேர வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் போக்குவரத்துச் சபை இந்த வேலைநிறுத்தம் “முற்றிலும் தேவையற்றது” எனக் கூறியுள்ளது.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தைப் போலன்றி, இம்முறை ஒரு தொழிற்சங்கம் மாத்திரமே பங்கேற்பதால் பாதிப்புகள் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














