காசாவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகம் தொடர்பாக, டொனால்ட் ட்ரம்பின் “சமாதான சபை” பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DP World இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் (பைனான்சியல் டைம்ஸ்’) (FT) செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகள் மற்றும் வணிகப் பொருட்களைக் கையாள்வதற்கான தளவாடங்கள் (Logistics) மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காசாவிற்குள் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தகைய திட்டங்கள் பாலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகளை ஓரங்கட்டுவதாகவும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களைப் புறக்கணிப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்துத் தங்களுக்குத் தெரியாது என DP World நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு இது தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.















