மாகாண சபைத் தேர்தல்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவினால் அறிவித்தல் ஒன்று இன்று (05) நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக, கலாநிதி உபாலி பன்னிலகே, முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வடகல, ரவி கருணாநாயக்க, ஜே. சி. அலவத்துவல, ஹர்ஷண ராஜகருணா, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக்க ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, மயில்வாகனம் ஜெயகதீஸ்வரன் மற்றும் சந்திம ஹெட்டியாரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண சபைத் தேர்தல் சட்டங்கள் தவிர்ந்த ஏனைய தேர்தல் சட்டக் கட்டமைப்புக்களை ஆழமாக மீளாய்வு செய்தல், அது குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அமைப்பதற்குத் தேவையான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தல் என்பன இந்த விசேட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான பொறுப்புகளாகும்.














