பிரித்தானியாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பயணிகள் தமது பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் என அந்நாட்டு போக்குவரத்துத் துறை (DfT) வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் விமான எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும், அவசரத் தேவைகளுக்கான மாற்றுத் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
எனவே, விடுமுறையைக் கழிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் அச்சமடைந்து தமது விமானப் பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் போக்கு காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், மே மாதத்தில் உலகளவில் சுமார் 13,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இது உலகளாவிய விமானச் சேவைகளில் வெறும் 1% மட்டுமே ஆகும்.
பிரித்தானியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயக்கப்படும் விமானச் சேவைகள் இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை.
முனிச் (Munich) மற்றும் இஸ்தான்புல் (Istanbul) ஆகிய நகரங்களே இந்த ரத்து நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘சிரியம்’ (Cirium) தரவுகள் தெரிவிக்கின்றன.
பயணிகள் தமது பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை உறுதிப்படுத்துமாறும், தகுந்த பயணக் காப்பீட்டை (Travel Insurance) வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் வெளிவிவகார அமைச்சின் (FCDO) அண்மைக்கால பயண வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.














