சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தெரிவு செய்யப்பட்டார்.
அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை வழங்கினர்.
சபாநாயகரை வாழ்த்தி முதல்வர் விஜய் பேசியதாவது: “மக்களே, மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்து அதனைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள், அதிக நன்மைகளை இந்த ஆட்சிக் காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம்.
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும், அவர்களுடைய கருத்துக்களுக்கும், அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு, நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு, ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றிக் கழகம் முன்மொழிந்து தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். என தெரிவித்துள்ளார்.















