அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடைபிடிக்கப்பட்டு வந்த 72 மணிநேரப் போர்நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
போர்நிறுத்தம் காலாவதியான சில மணிநேரங்களிலேயே, உக்ரைன் மீது ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இன்று காலை உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில்
ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக பிராந்திய நிர்வாகத் தலைவர் ஒலெக்சாண்டர் கன்ஷா தெரிவித்துள்ளார்.
கிவ் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை மீது ட்ரோன்கள் மோதியுள்ளன.
மேலும் கார்கிவ், சைட்டோமிர், சுமி மற்றும் செர்னிஹிவ் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜெலென்ஸ்கி, “கடந்த சில நாட்களாக நிலவிய பகுதியளவு அமைதியை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவே முடிவு செய்துள்ளது.
ரஷ்யா போர்நிறுத்தத்தை மதிக்கவுமில்லை, அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம், பெல்கோரோட், வோரோனேழ் மற்றும் ரோஸ்டோவ் ஆகிய பிராந்தியங்களுக்கு மேல் பறந்த உக்ரைனின் 27 ட்ரோன்களைத் தமது தற்காப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது. மேலும், போர்நிறுத்த காலத்தில் உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட முறை விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை இந்த 72 மணிநேரப் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தார்.
மே 9 முதல் 11 வரை நீடித்த இந்த அமைதி ஒப்பந்தம், ரஷ்யாவின் ‘வெற்றி தின’ கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போனது.
இந்தப் போர்நிறுத்தம் மோதலுக்கு ஒரு நிரந்தர முடிவைத் தரும் என ட்ரம்ப் எதிர்பார்த்த போதிலும், தற்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது.














