தர்மசாலாவில் நேற்று (17) மாலை நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2026 இந்தியன் பிரீமியர் லீக்கின் பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் RCB தற்போது 13 போட்டிகளில் இருந்து 18 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன்களான RCB, கடந்த சீசனில் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கி, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒன்பது வெற்றிகளைப் பெற்றுள்ளது.
மே 22 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் RCB வெற்றி பெற்றால், அவர்களால் முதல் இரண்டு இடங்களுக்குள் தங்கள் இடத்தை உறுதி செய்ய முடியும்.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த RCB அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்கள் என்ற சிறப்பான ஸ்கோரை பதிவு செய்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வெங்கடேஷ் ஐயர் 73 (40) ஓட்டங்களையும், விராட் கோலி 58 (37) ஓட்டங்களையும் மற்றும் டிம் டேவிட் 28 (12) ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பதிலுக்கு, 223 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய PBKS அணி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
அணி சார்பில் ஷஷாங்க் சிங் மாத்திரம் 27 பந்துகளில் 56 ஓட்டங்களை எடுத்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக வெங்கடேஷ் அய்யர் தெரிவானார்.
போட்டியின் இந்த முடிவு PBKS அணி மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்து விட்டது.
அவர்கள் இப்போது தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர், இது ஐபிஎல் வரலாற்றில் அவர்களின் இரண்டாவது மிக நீண்ட தொடர் தோல்வியாகும்.
2015 ஆம் ஆண்டில் அவர்கள் சந்தித்த தொடர்ச்சியான ஏழு தோல்விகளே அவர்களின் மிக மோசமான சாதனையாகும்.
PBKS அணிக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், அவர்கள் 13 புள்ளிகளுடன் தங்கள் தலைவிதியை இனி தீர்மானிக்கும் நிலையில் இல்லை.
அவர்கள் தங்கள் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும், ஏனைய போட்டிகளின் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும் என நம்ப வேண்டும்.
CSK, KKR, RR மற்றும் DC ஆகிய அணிகள் கூட பஞ்சாபின் சரிவை ஒரு புதிய நம்பிக்கையுடன் பார்க்கும்.
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக்கின் 62 ஆவது போட்டியானது, புது டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில், அக்சர் பட்டேலின் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) மற்றும் ரியான் பராக்கின் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிகளுக்கிடையே நேற்றிரவு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களில் 193 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ஓட்டங்களை எடுத்தது.

மூத்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு உதவினார்.
அணித் தலைவர் ரியான் பராக் (51), டோனோவன் ஃபெரேரா (0), ரவி சிங் (4), மற்றும் தசுன் ஷானக்க (10) உள்ளிட்ட ராஜஸ்தான் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்தார்.
14 ஆவது ஓவரில் 160/2 என்ற வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியின் வேகத்தைத் தடுப்பதில் அவரது பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது.















