சர்ச்சைக்குரிய ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இலக்குகளைத் தாக்கியதன் மூலம் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளது என்றும், இது போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைச் சிக்கலாக்கக்கூடும் என்றும் ஈரான் செவ்வாயன்று (27) கூறியது.
சமாதான முயற்சிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குண்டுவீச்சு நாட்களில் ஒன்றாக, இஸ்ரேல் செவ்வாயன்று லெபனான் மீது 120-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
எந்தவொரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானின் தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக நடைமுறையில் உள்ள நிலையற்ற போர் நிறுத்தத்தின் “கடுமையான மீறலாக” இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், தனது தாக்குதல்கள் தற்காப்பு நோக்கமுடையவை என்றும், ஏவுகணைத் தளங்களையும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகளையும் குறிவைத்ததாகவும் அமெரிக்கா கூறியது.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டைப் பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு “சில நாட்கள்” ஆகலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறினார்.
முன்னதாக, இரு தரப்பினரும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, நீரணை வழியாகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் ஒரு ஆரம்பகட்ட உடன்படிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த ஆரம்பகட்ட உடன்படிக்கையானது, ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட மிகவும் சிக்கலான பிரச்சினைகளைக் கையாள்வதற்குப் பேச்சுவார்த்தையாளர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
பல பில்லியன் டொலர் மதிப்பிலான முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதை அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என அந்நாட்டின் பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.














