அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும், நஷ்டத்தில் இயங்கும் அந்த விமான நிறுவனம், சர்வதேச விமான சேவைகளை சுமார் 27 சதவீதம் குறைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏர் இந்தியா வாரந்தோறும் சுமார் 4,400 விமான சேவைகளை இயக்குகிறது.
இவை ஏறத்தாழ 3,600 உள்நாட்டு சேவைகளும், 800 சர்வதேச சேவைகளும் ஆகும்.
இந்த நிலையில், 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சேவைகளில் நாங்கள் முன்னதாக அறிவித்திருந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தற்காலிகமாகச் செயல்பாடுகளை முறைப்படுத்தியுள்ளோம் என்று ஏர் இந்தியா இன்று (27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிக எரிபொருள் விலைகளின் தொடர்ச்சியான தாக்கம் ஒட்டுமொத்த செயல்பாடுகளில் இருப்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்று விமான நிறுவனம் கூறியது.
மேலும், இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, மாற்று விமானங்களில் மீண்டும் இடம் ஏற்பாடு செய்தல், இலவச தேதி மாற்றங்கள் அல்லது முழுப் பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற பொருத்தமான உதவிகள் முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியது.















