பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் கொ*லைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று (26) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை தெல்தெனிய பொலிஸார் மீட்டிருந்தனர்.
உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணராக பணிபுரிந்த ஷிமயா தர்ஷனி என்ற 34 வயதுடைய பெண் என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
அவரது காதலன் எனக் கூறப்படும் நபர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் பிள்ளையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து வலானை மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இவர்களிடம் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதன்போதே, பிரதான சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லூரியின் பொறுப்பதிகாரி உதவியுள்ளமை தெரியவந்தது.
விசாரணையின் போது பிரதான சந்தேகநபர் தான் அறைக்குச் சென்றபோது அந்தப் பெண் ஜன்னல் திரைச்சீலை தொங்கவிடும் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
எனினும் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜன்னல் திரைச்சீலை கம்பி மனித உடலின் எடையைத் தாங்கும் அளவுக்கு வலுவானது அல்ல என்பதால், விசாரணையைத் திசைதிருப்ப சந்தேகநபர் பொய் கூறுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை மரணத்தை மறைத்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பிள்ளையை தாயின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் வழிகாட்டலில் நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன.













