ஜமைக்காவின் சபினா பூங்காவில் எதிர்வரும் ஜூன் 3 முதல் 8 வரை நடைபெறவுள்ள, இலங்கைக்கு எதிரான பெரிதும் எதிர்பார்க்கப்படும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்கான தனது 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2027 ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான மேற்கிந்தியத் தீவுகளின் பயணத்தில், ஒரு முக்கியமான கட்டத்தின் தொடக்கத்தில் இந்தத் தொடர் அமைந்துள்ளது.
ஷேய் ஹோப் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணி, தங்களது சொந்த மண்ணில் தோல்வியே காணாத ஒருநாள் தொடர் வெற்றியைத் தொடர்ச்சியாக ஐந்தாக நீட்டிக்கும் நோக்கத்தில் உள்ளது.
இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்திருந்தனர்.
முதுகுக் காயம் காரணமாக 2025 ஜூலை முதல் அணியில் இடம்பெறாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்பும், கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்காத குடகேஷ் மோட்டியும் இலங்கையுடனான தொடருக்கான அணயில் திரும்பியுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் வியூகத் தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஷிம்ரன் ஹெட்மயரை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் போட்டி அணியில் சேர்த்துள்ளனர்.
மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார்.
ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் 10 நாள் பயிற்சி நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையுடனான ஒருநாள் தொடரில் விளையாட அணியினர் மே 31 அன்று ஜமைக்காவை சென்றடைவார்கள் என்று கிரிக்கெட் மேற்கிந்தியத்தீவுகள் குறிப்பிட்டுள்ளது.
அணி விபரம்,
ஷேய் ஹோப் (தலைவர்), அக்கீம் அகஸ்டே, ஜோன் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர்.
















