பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் சமூக நலச் செலவினங்களைக் குறைத்து, அந்த நிதியை இராணுவப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்துமாறு கன்செர்வேட்டிவ் கட்சியின் தலைவர் கெமி பேடனோக் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் தொழிற்கட்சியின் சாத்தியமான அடுத்தகட்ட தலைமைப் போட்டியாளர்களுக்கு கெமி பேடனோக் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் ஸ்டார்மருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உலகளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில், நமது இராணுவத்திற்குப் போதுமான நிதி வழங்காமல் இருக்க முடியாது எனவும் அச்சுறுத்தல்கள் மிக அவசரமானவையாக இருக்கும் போது, அதற்கான நிதி ஒதுக்கீட்டைத் தள்ளிப்போடக் கூடாது எனவும் இது நாம் தீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் எனவும் ” கெமி பேடனோக் குறிப்பிட்டுள்ளார்.














