நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் தொலைபேசி கோபுரங்களின் கேபிள்களைத் துண்டித்து, பெருமளவிலான சொத்துக்களைத் திருடி வந்த இரு வேறு கொள்ளைக் கும்பல்களைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான கேபிள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களைத் துண்டித்துத் திருடிய சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்களை ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் நேற்று (13) நடத்திய விசேட சோதனையின் போது கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வேளையில் சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான அதிமுக்கிய கேபிள்களை இவர்கள் துண்டித்துத் திருடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ரதுபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்களின் ஒரு பகுதியை ராகம பொலிஸார் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முடுக்கிவிட்டுள்ளனர்.













