ஈரான் போர் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், சீரான வானிலை மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் சிறப்புச் சலுகைகள் காரணமாக கடந்த மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை எதிர்பார்ப்பை விட அதிகமாக அதிகரித்துள்ளதாக இன்று (19) வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
2026 ஏப்ரல் மாதத்தில் 1.0% சரிவைக் கண்ட விற்பனை அளவு, மே மாதத்தில் 1.2% அதிகரித்துள்ளதாக நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2026 மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை 0.5% உயரக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்ததை விட இது கணிசமான அதிகரிப்பாகும்.
பெட்ரோல் விற்பனையைத் தவிர்த்து ஒப்பிடுகையில் 2026 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை அளவு 1.2% அதிகரித்தது; ஆண்டு அடிப்படையில் இது 4.6% உயர்வைக் கண்டது.
வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக்காலம் ஆகியவை மக்களை வெளியே சென்று செலவு செய்யத் தூண்டியதால் மே மாதத்தில் சில்லறை விற்பனையாளர்கள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டனர்.
குறிப்பாக ஆடை மற்றும் இணையவழி விற்பனையாளர்கள் அதிக தேவையைக் கண்டு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர் என்று லொயிட்ஸ் (Lloyds) வங்கியின் நுகர்வோர் பிரிவுத் தலைவர் சாண்ட்ரா பிரின்ஸ் கூறினார்.
இதனிடையே, மத்திய கிழக்கு மோதல் இன்னும் நுகர்வோருக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வருவதாக முக்கிய பிரிட்டிஷ் சில்லறை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் செய்துகொண்ட இடைக்கால ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நம்பிக்கைக்கு சில காரணங்கள் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டாலும், தங்கள் செலவுகள் மீதான தாக்கத்தை அவர்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.














