காணாமல் போனவர்களுக்காக தற்பொழுது வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதால், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு சிறந்த இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இச்சந்திப்பில் அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் விபரிக்கையில்:
காணாமல் போன ஒருவருக்காக இதுவரை வழங்கப்பட்டு வரும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை தற்போதைய சூழலில் எதற்கும் போதுமானதல்ல. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இந்த உறவினர்களை ஒரு விசேட பிரிவினராகக் கருதி, அவர்களுக்கு முறையானதொரு ‘இழப்பீட்டுப் பொதியை’ வழங்குவது குறித்து புதிய குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
எமது அமைச்சின் நோக்கம் வெறும் இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. கடந்த காலத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை முழுமையாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மறுபடி கட்டியெழுப்புவதே முதன்மைக் குறிக்கோளாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேங்கிக் கிடக்கும் இந்த முறைப்பாடுகளை மிக விரைவாக விசாரித்துத் தீர்ப்பதற்காக, விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் 375 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 75 அதிகாரிகளைக் கொண்ட 25 விசாரணைக் குழுக்கள் தற்பொழுது களத்தில் இறக்கப்பட்டு விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
“கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் இன்னும் தொடர்வதற்குக் கடந்த கால அரசாங்கங்கள் இப்பிரச்சினையை முறையாகக் கையாளவில்லை என்பதே சான்றாகும். உறவினர்கள் பலமுறை பல ஆணைக்குழுக்களிடம் அலைந்து திரிந்து முறைப்பாடு செய்துள்ளனர்” என அமைச்சர் கவலை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த காலத் துயரங்களை முழுமையாக மறந்துவிட வேண்டும் எனத் தான் கூறவில்லை என்றும், எனினும் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, புதிய சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வடக்கு மற்றும் தெற்கு என இரு பிராந்தியங்களில் உள்ள அனைத்து மக்களின் மனங்களையும் வென்றே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, காணாமல் போன நபர்களுக்கு விரைவான நீதியையும் இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.














