பிரான்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தனது பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமான வாரணாசியின் படப்பிடிப்பு இன்னும் சுமார் 80 நாட்கள் எஞ்சியுள்ளதாகத் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்தார்.
மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படம் தயாரிப்பு நிலையில் உள்ளதுடன், 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற RRR திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இயக்குனர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
படத்தின் படப்பிடிப்பு நிலை குறித்துப் பேசிய ராஜமௌலி, முக்கிய சண்டைக் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் அடுத்த 80 நாட்களில் படமாக்கி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அண்மைய பேட்டி ஒன்றிலும், 2026 செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் ராஜமௌலி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















