ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கூடியது.
பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான அநுர கருணாதிலக,; தம்மிக படபெந்தி, சுசில் ரணசிங்க, ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல் நினோ காலநிலை நிலைமைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது

எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் தயார்நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பாக பல முக்கிய தீர்மானங்களும் எட்டப்பட்டன.
இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனர்த்த முகாமைத்துவம் மற்றும் காலநிலையை எதிர்கொள்வது காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்றக் குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டத்தை திருத்துகையில் அந்த பரிந்துரை குறித்தும் கவனம் செலுத்துவதற்காக அதனை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை உடனடியாக புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீர்மின் உற்பத்தியைத் தடையின்றி பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், சூரிய சக்தியின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்யும் பணிகளை விரைவுபடுத்துவதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
பேரிடர்களின் போது இழப்பீடு வழங்கும் போது, காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாமல் போகும் பிரச்சினைக்குத் தீர்வாக, அதிகாரிகள் மூலம் வசிப்பிடத்தை உறுதிசெய்து இழப்பீடு வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த்த திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் நுவரெலியா மாவட்டக் குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக நான்கு வருட கால எல்லைக்கு உட்பட்ட முறையான திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்













