பாஸ்டன் மைதானத்தில் மொராக்கோவை வீழ்த்தி 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு பிரான்ஸ் முன்னேறியது.
வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற ஆட்டத்தில், பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே ஒரு பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், போட்டியின் 60-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றை அடித்தார்.
பின்னர், ஆறு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களை அடித்த பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
27 வயதில் 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய மிக இளம் வயது வீரரான எம்பாப்பே, பெனால்டி ஏரியாவிற்குள் இருந்து வளைந்து செல்லும் வகையில் அடித்த ஷாட் மூலம் தனது 20-வது உலகக் கிண்ண கோலையும் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து ஆறு நிமிடங்களில் உஸ்மான் டெம்பலே தரைமட்டமாக அடித்த ஷாட் மூலம் மற்றொரு கோலை அடிக்க, இதன் விளைவாக பெல்ஜியம் அல்லது ஸ்பெய்ன் அணியுடன் அரையிறுதியில் மோதும் வாய்ப்பினை பிரான்ஸ் உறுதிபடுத்தியது.
எட்டு கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியுடன் இணைந்து இந்தத் தொடரின் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பே முதலிடத்தில் உள்ளார்.
அதேவேளையில், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை விட அவர் ஒரு கோல் பின்தங்கியுள்ளார்.
2022 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியின் மறுபதிப்பாக, இதுவரை ஆடிய மூன்று நாக்-அவுட் சுற்றுகளிலும் கோல் எதுவும் வாங்காமல் இருந்த பிரான்ஸ் அணி, ஆட்டம் முழுவதும் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறும் நோக்கில் இருந்த மொராக்கோ அணி, காயமடைந்த முன்கள வீரர் இஸ்மாயில் சைபாரியை மிகவும் தவறவிட்டதுடன், 84-வது நிமிடம் வரை இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கத் தவறியது.
இந்த தோல்வியன் பின்னர் கருத்து தெரிவித்த மொராக்கோ அணியின் பயிற்சியாளர் மொஹமட் உவாபி,
நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம், நாங்கள் முன்னேற விரும்பினோம், பிரான்ஸ் ஒரு சிறந்த வீரர்களைக் கொண்ட ஒரு மாபெரும் அணி என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும், கோல் அடிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் பிரான்ஸுக்குக் கிடைத்தன.
எங்களிடம் புதிய யோசனைகளும் புத்துணர்ச்சியும் இல்லை, இந்தத் தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று பிரான்ஸ் வலிமையாக இருந்தது, ஆனால் எங்களால் போட்டியிட்டு முன்னேற முடியும், ஒருவேளை நான்கு ஆண்டுகளில் அவர்களை வெளியேற்றவும் கூடும் – என்றார்.
2030 உலகக் கிண்ணத்தை ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கலுடன் இணைந்து மொராக்கோ நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












