டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
டகேடா (Takeda) நிறுவனத்தின் ‘க்யூடெங்கா’ (QDENGA / TAK-003) என்ற டெங்கு நோயக்கு எதிரான தடுப்பூசிக்கு இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசியாக இது அமைந்துள்ளது.
நகர்மயமாதல், பருவநிலை மாற்றம், நுளம்புகளின் வாழ்விடங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் கடந்த இரு தசாப்தங்களாக டெங்கு பாதிப்புகள் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிக அதிக டெங்கு பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து விளங்கி வருகிறது;
இத்தகைய சூழலில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.
QDENGA என்பது வீரியம் குறைக்கப்பட்ட உயிருள்ள வைரஸைக் கொண்ட ஒரு தடுப்பூசி ஆகும்.
அதாவது, இது டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கு (DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4) எதிராகவும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய டெங்கு தடுப்பூசியான Dengvaxia-வைப் போலன்றி, QDENGA-வைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருவருக்கு ஏற்கனவே டெங்கு பாதிப்பு இருந்ததா என்பதை அறிய இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை,
இது பெரிய அளவிலான பொது சுகாதாரத் திட்டங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நன்மையாகும்.
ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம், பிரேசில், இந்தோனேசியா மற்றும் ஆர்ஜென்டினா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தடுப்பூசிக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பருவகால பொது சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக டெங்கு உருவெடுத்து வரும் வேளையில், இந்தியாவும் இப்போது அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.












